பிரதமர்-சோனியாவை பாராட்டி ஒரு நிமிடம் தொடர்ந்து கைதட்டல்!
சென்னை: மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை ராஜ்யசபையில் நிறைவேற்றிய பின்னர் முதல்முறையாக தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்திக்கு நேற்று நடந்த சட்டமன்ற திறப்பு விழாவில் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று கூட்டத்தினர் ஒரு நிமிடம் கைதட்டி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர்.
பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா டெல்லி ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்ட பின் முதல்முறையாக, பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தமிழகம் வந்துள்ளார்.
நேற்று நடந்த தமிழக சட்டமன்ற வளாகம்-தலைமை செயலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர்களுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று கூட்டத்தினர் ஒரு நிமிடம் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, "பெண்கள் இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை பல ஆண்டு காலமாகவே கனவாக இருந்து அது நிறைவேறுமா என்று பேசப்பட்டு - நிறைவேற்றவிடுவோமா என்று பயமுறுத்தப்பட்டு - அனைத்தையும் மீறி அதற்கான மசோதாவை மாநிலங்கள் அவையிலே நிறைவேற்றி விட்டு முதல் முறையாக நமது தமிழ் மாநிலத்திற்குத் தான் - இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் வந்திருக்கிறார்கள்.
வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிவிட்டு வந்திருக்கும் அவர்களை இதற்காக முதன்முதலாக ஒரு மாநிலத்தின் சார்பில் வரவேற்கும் வாய்ப்பு எதிர்பாராமல் நமக்குத்தான் கிடைத்திருக்கிறது. இதனை நினைத்து மகிழ்வதற்கு அடையாளமாக அனைவரும் ஒரு நிமிடம் தொடர்ந்து கைதட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்..." என்றார் முதல்வர்.
உடனே கூட்டத்தினர் தொடர்ந்து ஒரு நிமிடம் இடைவிடாமல் உற்சாகத்துடன் கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அதனை புன்னகையுடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டனர்.
பொதுவாக இம்மாதிரி நிகழ்ச்சிகளில் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு மிகவும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது.
இந்தியாவின் முன்னோடி மாநிலம் தமிழகம் என்று வெறும் பாராட்டாகச் சொல்லாமல், அதன் காரணங்களையும் அவர் விளக்கினார்.
மேலும் தமிழக இளைஞர்களுக்கு உரிமையுடன் அவர் சொன்ன யோசனைகள் மற்றும் அறிவுரை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அமரர் எம்ஜிஆர் பற்றி மன்மோகன் சிங் பேசியவை அந்த பெரும் தலைவர்களுக்கு சரியான நேரத்தில் செய்யப்பட்ட மரியாதையாக அமைந்தது.












Click it and Unblock the Notifications