4 சமாஜ்வாடி ராஜ்யசபா எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
டெல்லி: சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ராஜ்யசபா இன்று திரும்பப் பெற்றது.
கடந்த வாரம் ராஜ்யசபாவில் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பெரும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வீர்பால் சிங் யாதவ், நந்த் கிஷோர் யாதவ், அமீர் ஆலம் கான், கமால் அக்தர் ஆகிய சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் உள்பட 7 பேர் நடப்புக் கூட்டத் தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மேற்கண்ட நான்கு சமாஜ்வாடி எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் இன்று கொண்டு வந்தார்.
இதை அவை ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான் கூறுகையில், நான்கு பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முடித்துக் கொள்ளப்படுகிறது என்று அறிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற எம்.பிக்கள் - ராஷ்டிரிய ஜனதாதளத்தின் சுபாஷ் பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதளத்தின் இஜாஸ் அலி, லோக் ஜன சக்தி உறுப்பினர் சபீர் அலி ஆகியோர் மீதான நடவடிக்கை இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகியுள்ள நான்கு சமாஜ்வாடி உறுப்பினர்களும் கடந்த வாரம் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்துப் பேசினர். அப்போது நான்கு பேரும் மன்னி்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸாகியுள்ளதாக கூறப்படுகிறது.