கடலூர் திமுக பிரமுகர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை
கடலூர்: கடலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் ரெட்டியார். இவர் மாவட்ட திமுக பிரதிநிதியாக உள்ளார்.
இவரும் இவரது மனைவி வசந்தாவும், தனது வீட்டில் தம்பி மகன் ராஜ்குமாருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, காலிங் பெல் சத்தம் கேட்டு, ராஜ்குமார் கதவை திறந்த போது, திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என கூறிய 5 பேர் தேங்காய், பூ, தாம்பூல தட்டுடன் வீட்டின் உள்ளே வந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் வந்தவர்கள் வீட்டுக் கதவை தாழிட்டனர். ராஜ்குமார் கையைக் கட்டி போட்டனர்.
அப்போது ராஜ்குமார் சத்தம் போடவே, அச் சத்தம் கேட்டு சுப்புராம் ஓடி வந்தார். அப்போது அவரது கழுத்தில், மற்றொரு நபர் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினான்.
சுப்புராமை அழைத்துச் சென்ற கொள்ளையர்கள் கடப்பாரை மூலம் பீரோவை உடைத்து 20 சவரன் நகை, வைரக் கம்மல், மற்றும் ரொக்கம் ரூ 18 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், சுப்புராம் மனைவி வசந்தா அணிந்திருந்த கம்மல், வளையல், தாலி சரடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த வெள்ளை நிற சுமோ காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ 5 லட்சம் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications