பிரதமர்-முதல்வர் பதவிகளுக்கு நேரடி தேர்தல்-பாபுலால்
ராமேஸ்வரம்: பிரதமர், முதல்வர் பதவியில் அமர்பவர்களை மக்கள் நேரடியாக ஓட்டு மூலம் தேர்வு செய்யும் முறையில் தான் ஜனநாயகம் மேம்படும் என்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஷ் கட்சியின் தலைவருமான பாபுலால் மராண்டி கூறினார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார் பாபுலால் மராண்டி. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய அவர், கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்பு, பாபுலால் மராண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
'பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப்பாதையில் ஆய்வு நடத்தப்பட்டு வந்தாலும், யாருக்கும் பாதிக்காத வகையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது.
பிரதமர், முதல்வர் பதவிகளுக்கு, பொது மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான், நாடு மேம்பாடு அடையும்' என்றார்.