தென்காசியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் திருவனந்தபுரத்தில் கொலை
தென்காசி : நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி தேவிபட்டிணத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி வெர்ஜியா ராணி. இவர்களுக்கு மலர் தெரசியா (11) என்ற மகளும், டொமினிக்(9) என்ற மகனும் உள்ளனர்.
ஆரோக்கியம் திருவனந்தபுரம் மணக்காட்டில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி எண்ணெய் பலகாரம் தயார் செய்து மொத்தமாக கடைகளுக்கு விற்கும் தொழில் செய்து வந்தார். இவர்களிடம் தென்காசியை சேர்ந்த கார்த்திக் (16), செல்வம் (14) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆரோக்கியம் தனது மனைவியுடன் தென்காசிக்கு சென்றார். பிள்ளைகள் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்தனர். மலர் தெரசியா மட்டும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவில் தங்க சென்று விடுவார். டொமினிக் மற்றும் வேலைக்கார சிறுவர்கள் வீட்டில் தங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் மலர் தெரசியா உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டிற்குள் தம்பி டொம்னிக் மற்றும் கார்த்திக் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். ஃபோர்ட் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஐஜி ஹேமசந்திரன், திருவனந்தபுரம் துணை கமிஷனர்கள் நாகராஜூ, ஜோலிசெரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சிறுவர்களின் தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் வீட்டில் காஸ் சிலிண்டர் லீக் ஆகி கொண்டிருந்தது. சிறுவர்களின் உடலை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுடன் தங்கியிருந்த செல்வத்தை காணவில்லை. எனவே அவர்கள் இருவரையும் செல்வம் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் செல்வத்தை தேடி தென்காசிக்கு வந்துள்ளனர்.