செம்மொழி மாநாடு - ஆய்வரங்கங்களின் எண்ணிக்கை உயர்வு
கோவை: கோவையியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்குகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படுவதாக மாநாட்டு அரங்க அமைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வரங்குகள் நடைபெறும் தொழிற்காட்சி வளாகத்தின் பிரதான அரங்குகள் (ஏ,பி,சி), உணவுக் கூடம், திறந்தவெளி அரங்கு அமையும் இடம், புதிய நுழைவாயில் அமையும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
ஆய்வரங்கம் நடைபெறும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப் பணி குறித்து அமைச்சருக்கு, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் விளக்கம் அளித்தார். இந்த அரங்குகளுக்கு வந்து செல்லக் கூடிய நுழைவாயில் மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆறுமுகம் பேசுகையில்,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்கள் நடத்துவதற்கு 30 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கெனவே 17 அரங்குகள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்கள், விவாதிக்கப்படும் தலைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அரங்குகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, 1000 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரங்குகள் அமைக்கும் பணி குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையும். கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கான நுழைவாயில் குறுகியதாக இருந்தது. தற்போது பிரதான நுழைவாயில் பெரிய அளவில் அமைக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications