பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை!
ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் குறித்து பெரும் குழப்பமே இதுவரை நீடித்து வருகிறது.
பிரபாகரன் என்று ஒரு உடலைக் காட்டியது இலங்கை. பின்னர் அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டோம் என்று அப்போதைய ராணுவத் தளபதி பொன்சேகா கூறினார்.
இதையடுத்து இந்தியாவின் சிபிஐ இலங்கை அரசை அணுகி, பிரபாகரன், பொட்டு அம்மான் மரணத்தை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழைத் தருமாறு கேட்டது. ஆனால் இதுவரை அதைக் கொடுக்கவே இல்லை இலங்கை அரசு.
மேலும், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதையும் அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.
முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்திலும் குழப்பமே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது.
பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, பொட்டு உயிருடன் இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பும் திடமாக நம்புகிறதாம். இரு அமைப்புகளுமே பொட்டு அம்மானைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனவாம்.
இதனால் இலங்கையின் நிலைமை இடியாப்பச் சிக்கலாக மாறியுள்ளது.