பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்து - 8 வயது மாணவி பலி - ஏரலில் 3 மாணவர்கள் பலி
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாகி 8 வயது மாணவி பலியானார். 39 குழந்தைகள் காயமடைந்தனர்.
இதேபோல ஏரலில் நடந்த சாலை விபத்தில் 3 மாணவர்கள் கோரமாக பலியானார்கள்.
பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்காக 40 குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பள்ளி வேன் சாலையில் திடீரென நிலை தடுமாறி கவிழந்தது.
இந்த விபத்தில், வேனில் இருந்த 40 குழந்தைகள் காயமடைந்தனர். பிரியங்கா என்ற 8 வயது குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா உயிரிழந்தார்.
பைக்கில் சென்ற 3 மாணவர்கள் பலி:
இதேபோல, தூத்துக்குடி அருகே பழையகாயலில் இன்று காலை பஸ் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாசரேத்தில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு தனியார் பஸ் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த குருசாமி என்பவர் ஓட்டினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் முக்காணிக்கும், பழையகாயலுக்கும் இடையே தனியார் சேம்பர் செங்கல்சூளை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக வந்த பைக் பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த பழையகாயல் அம்புரோஸ் நகரை சேர்ந்த சிலுவைபிச்சை மகன் ராகுல், பரதர் தெரு சம்பத்ராஜ் மகன் நிஷாந்த், மாரமங்கலம் மிக்கெல்சாந்தி மகன் விஜய், ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இவர்கள் 3 பேரும் பழையகாயலில் உள்ள புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று பள்ளி விடுமுறையை ஓட்டி மாணவர்கள் பெட்ரோல் போடுவதற்காக பைக்கில் முக்காணிக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர்.
தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி நடராஜமூர்த்தி, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.