தமிழக புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் 2010-11 தாக்கல்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டசபைக்கு தமிழக அரசு விடை கொடுத்து விட்டது. இதையடுத்து நாளை புதிய சட்டசபையில் 'குடித்தனத்தைத்' தொடங்குகிறார்கள்.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டசபைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இந்த சட்டசபை செயல்பாட்டுக்கு வருகிறது.
நாளை 2010-11ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கலுக்கு சட்டசபையை தயார்படுத்தும் வகையில், பழைய சட்டசபைக் கட்டிடத்தில் இருந்து பொருட்கள் அனைத்தும் புதிய சட்டமன்றத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கட்டளைக்கேற்ப இதற்கான பணிகள் இரவும் பகலும் நடக்கின்றன.
புதிய சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடப்பதற்கு ஏற்ப முதல்வர், சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்கார்வதற்காகவும், எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காகவும் இருக்கைகள் அமைக்கும் பணிகள், ஒலிபெருக்கிகள் பொருத்துவது, மின்சார இணைப்புகள் என்று அனைத்து பணிகளும் மின்னல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, பட்ஜெட் கூட்டம் நடப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
நிதி அமைச்சர் க.அன்பழகன் புதிய சட்டமன்றத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி சபையின் அடுத்த பணிகள் பற்றி முடிவு செய்யும்.
சட்டசபை புதிய கட்டடத்திற்கு மாறினாலும் எதிர்க்கட்சிகளின் பழைய கோஷங்கள் மாறாமல் தொடர்ந்து அதே காரசார விவாதங்களும் கலாட்டாக்களும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி வரலாம்...?
புதிய சட்டசபைக்குள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் எந்த வழியாக வருவது என்பது பற்றி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர் கட்சி தலைவர், அரசு கொறடா, பொதுப்பணித்துறையால் வாகன அனுமதி சீட்டுடன் வரும் துணைச்செயலாளர் மற்றும் அதற்கும் மேல்நிலை அதிகாரிகள் அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பு உள்ள வாயில் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாகவும், செய்தியாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள வாயில் வழியாகவும் சட்டப்பேரவை வளாகத்தினுள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.