நித்தியானாந்தா சர்ச்சை- சிஐடி விசாரணை நடத்த கர்நாடகா முடிவு
பெங்களூர்: நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்கள் கர்நாடக போலீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக காவல்துறை ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி இன்ஃபேன்ட் கூறுகையில், நித்தியானந்தா விவகாரம் குறித்த ஆவணங்களை, தமிழக போலீஸார், கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளனர். அந்த கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவை, தமிழில் உள்ளன. கன்னடத்தில் மொழி பெயர்த்து, விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழில் உள்ள புகார் விபரங்களை மொழி பெயர்த்து, பிடதி போலீஸாருக்கு அளித்து, விசாரணை துவக்கப்படும். பிடதி போலீஸாரின் விசாரணைக்கு பின்னர், இந்த விவகாரம் இரு மாநிலங்களிலும் சம்பந்தப்பட்டிருப்பதால், தேவையிருப்பின், சி.ஐ.டி., விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.