மும்பை: மாஜி சுங்க அதிகாரி துப்பாக்கி சூடு-சிறுமி பலி
மும்பை: மனநலம் குன்றிய, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி கண்மூடித்தனமாக சுட்டதில் 16 வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.
மும்பை அந்தேரி பகுதியில் சௌஜன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ஹரிஷ் மரோடியா.
65 வயதான இவருக்கும் அடுக்குமாடியில் அருகில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து வருதாக கூறப்படும் ஹரிஷ், அருகில் குடியிருப்பவர்களுடன் சொத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலையும் வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். சுமார் பனிரெண்டு மணி வரை தகராறு நீண்டுள்ளது.
அப்போது அந்த வழியே 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் காணப்பட்ட ஹரிஷ், யாரும் எதிர்பாராத வகையில் அந்த சிறுமியை திடீரென பிடித்து தூக்கிச் சென்று தன் குடியிருப்புக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு போலீசார் வந்து ஹரிஷிடம் கதவை திறக்குமாறு கூறினார்.
ஆனால் ஹரிஷ் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கிவிட்டார்.
போலீசாரும் பதிலுக்கு சுட்டனர்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் போலீசார் உள்ளோ சென்று பார்த்த போது ஹரிஷுடன், அந்த சிறுமியை துப்பாக்கியால் சுடப்பட்டு தரையில் விழுந்து கிடந்தார்.
உடனடி ஹரிஷ் மற்றும் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.