இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறிய நீதிபதி: பாக். நாடாளுமன்றத்தில் இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு
இஸ்லாமாபாத்: இந்துக்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்கிறார்கள் என்று லாகூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து 9 இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றில், இந்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் ரமேஷ் லால், 40 லட்சம் பாகிஸ்தான் இந்துக்களின் உணர்வுகளை நீதிபதி காஜா ஷெரீப் புண்படுத்தி விட்டார். இதை தேவையற்ற கருத்து என்று கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினார்.
அவருடன் பிற இந்து எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் மொத்தம் 9 பேர் உள்ளனர். இந்த 9 பேருமே வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆப்கன் தலிபான் தலைவர்களை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, காஜா ஷெரீப், பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல, இந்துக்கள்தான். அவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு பண உதவி செய்கிறார்கள் என்று கூறினார். இதுதான் தற்போது அங்கு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரமேஷ் லால், இந்த விவகாரத்தில் அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் தலையிட வேண்டும். பாகிஸ்தான் இந்துக்களின் தேசபக்தி குறித்து சந்தேகப்பட்டு விட்டார் நீதிபதி ஷெரீப்.
இந்த ஆட்சேபகரமான வார்த்தைப் பிரயோகம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
வெளிநடப்பு செய்த இந்து எம்.பிக்களை அரசுத் தரப்பில் சமாதானப்படுத்தி மீண்டும் அவைக்கு அழைத்து வந்தனர்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான குர்ஷித் அகமது ஷா கூறுகையில், வாய் தவறி அப்படிக் கூறி விட்டார் நீதிபதி. தலிபான்களுக்கு உதவுவதாக இந்தியாவைத்தான் குறை கூற வந்தார் நீதிபதி. ஆனால் இந்துக்கள் என்று வாய் தவறி அவர் கூறி விட்டார். இதுதொடர்பாக நீதிபதியின் சார்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி. ரஷீத் அக்பர் நிவானி கூறுகையில், தேவையில்லாத கருத்துக்களைக் கூறி நீதிபதிகள் விளம்பரம் தேட முயற்சிக்கக் கூடாது. நீதி வழங்குவது தொடர்பான கருத்துக்களை மட்டுமே அவர்கள் பேச வேண்டும். தீர்ப்புகள் மூலமாக மட்டுமே அவர்கள் பேச வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினர் முனாவர் தல்பூர் கூறுகையில், பாகிஸ்தான் இந்துக்கள் தேச பக்தி மிக்கவர்கள். உண்மையான பாகிஸ்தானியர்கள், மிகச் சிறந்த பாகிஸ்தானியர்கள். அதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. நீதிபதியின் பேச்சு இந்துக்களுக்கு எதிரானது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு நீதிபதி எந்தவித சப்பைக் கட்டும் கட்டக் கூடாது. நீதிபதியின் பேச்சுக்காக நான் பாகிஸ்தான் இந்து சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.