அடுத்த 5 ஆண்டுகளில் 100 மில்லியன் மக்களுக்கு பிராட்பேண்ட்!
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் 100 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பிராட்பேன்ட் உபயோகிப்பாளர்களாக மாறியிருப்பார்கள் என பிரதமரின் தொழில்நுட்ப கட்டமைப்பு ஆலோசகர் சாம் பிட்ரோடா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைத் தொடர்பு புரட்சி ஏற்படக் காரணமானவர் என்று சாம் பிட்ரோடாவை குறிப்பிடுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் தொடலைத் தொடர்புத் துறையில் ஏற்படவுள்ள மாறுதல்கள் குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் மக்கள் தொகை 1.2 பில்லியன். இவர்களில் 10 மில்லியன் பேருக்கு மட்டுமே பிராட்பேன்ட் வசதி உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 மில்லியன் மக்களுக்கு பிராட்பேன்ட் வசதி அளிக்கப்பட்டுவிடும் என நம்புகிறேன்.
இன்டர்நெட், தொலைபேசி மற்றும் ஐடி துறைகளை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் வரும் ஆண்டுகளில் கல்வி மற்றும் ஆரோக்கியத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும்" என்றார் சாம் பிட்ரோடா.
நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களையும் இணைக்கும் தேசிய அறிவுசார் நெட்வொர்க்கை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும், இதில் 10 ஜிபி திறனுடன் கூடிய பிராட்பேன்ட் இணைப்பு பயன்படுத்தப்படும் என்றும் பிட்ரோடா தெரிவித்தார்.