காஷ்மீரில் இருந்து 35,000 துணை ராணுவப்படையினர் வாபஸ் - உமர் அப்துல்லா தகவல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 15 மாதங்களில் 35 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
எல்லை தாண்டிய ஊடுருவல்காரர்கள், தீவிரவாதிகள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு என பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் நடவடிக்கை என்ற பேரில் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் முகாமிட்டுள்ள துணை ராணுவப்படைகளின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரங்களை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் கணிசமான எண்ணிக்கையில் படையினரை வாபஸ் பெறவேண்டும் என முதல்வர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் கடந்த 15 மாதங்களில் துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுப்படை வீரர்கள் காஷ்மீரில் இருந்து கடந்த 15 மாத காலத்தில் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியானா பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படைவீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என பாஜக எம்எல்ஏ சமண்லால் குப்தா சட்டசபையில் தெரிவித்தார்.