வரியில்லா தமிழக பட்ஜெட்-பற்றாக்குறை ரூ. 3,396 கோடி!
பல்வேறு பொருட்களுக்கான வரிகளைக் குறைத்தும், சில பொருட்களை வரிச் சலுகைகளை அளித்தும் அன்பழகன் அறிவித்தார். புதிய வரி விதிப்பு ஏதும் இதில் இடம் பெறவில்லை.
வரும் 2010-11ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.63,091.74 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே காலகட்டத்தில் மொத்த செலவினங்களின் மதிப்பு ரூ.66,488.19 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.3,396.45 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும்.
அரசு பணியாளர்களுக்கு ஆறாவது ஊழியக் குழு பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்பட்டதே இந்த பற்றாக்குறைக்கு பிரதான காரணம் என நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டார்.
கடன், மானியங்கள் உள்ளி்ட்ட பல்வேறு மூலதன செலவினங்களின் வகையில் ரூ.12,825.68 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 16,222.13 கோடி என கணிக்கப்படுகிறது.
இந்த நிதியை செலவினங்கள் குறைப்பு மற்றும் வரி நிர்வாகத்தின் மூலம் சமாளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
13வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளின்படி தமிழக அரசின் இந்த நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கத்தக்கது தான் என்றும் அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டார்.
செலவினங்களில் சிக்கனத்தை கடைபிடித்தும், வரி வசூலை மேம்படுத்தியும் இந்த பற்றாக்குறை ஈடுகட்டப்படும் என்றார் அமைச்சர்.
கடந்த 2009 மார்ச் மாத நிலவரப்படி தமிழக அரசு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகை அளவு ரூ.74,858 கோடி.
கடந்த 2006-07 முதல் 2008-09ம் ஆண்டு காலத்தில் மட்டும் இந்த தொகை ரூ.17,401 கோடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரிக் குறைப்புகள்:
வணிக சின்னம் இடப்பட்ட காபி தூள், மாவு, பொடி, ஈர மாவு ஆகியவைகளுக்கு வரிகுறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தையல் ஊசி, கத்தரிக்கோல், பட்டன், பெயிண்ட் பிரஷ் ஆகியவற்றுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
வரி விலக்குகள்:
கைத்தறியில் பயன்படும் ஜரிகைக்கு கொள்முதல் மற்றும் விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திடப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பாக்கு மர இலைகளால் செய்யப்படும் தட்டு, தொன்னை மீதான வரி ரத்து செய்யப்படுகிறது.
மிளகு, சீரகம், சோம்புக்கு கடந்த ஆண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவற்றின் பொடி வகைகளுக்கும் வரி விலக்கு நீட்டிக்கப்படுகிறது.
அதேபோல சோற்றுக்கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.