சாலையில் கவிழ்ந்து பீர் லாரி விபத்து- கொட்டிய பீரை அள்ளிக் குடித்த 'குடி' மக்கள்
சென்னை: சென்னையிலிருந்து விருதுநகருக்கு பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து விழுந்தது. இதில் பீர் பாட்டில்கள் உடைந்து பீர் சாலையில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்த 'குடி'மக்கள் ஓடி வந்து அதை அள்ளிக் குடித்து ஆனந்தமடைந்தனர்.
சென்னையில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி விருதுநகருக்கு புறப்பட்டது. லாரியை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மாடசாமி (40) என்பவர் ஓட்டிவந்தார்.
அந்த லாரி இன்று காலை 7 மணியளவில் திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியம் என்ற இடத்தில் வந்த போது பின்பக்க ஆக்சில் முறிந்து விபத்துக்குள்ளானது.
நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து ரோட்டில் ஆறாக ஓடியது. இதனை அவ்வழியே சென்ற குடிமகன்கள் பார்த்து உடையாத பீர் பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்றனர்.
பலர் கொட்டி பீரை அப்படியே அள்ளிக் குடித்தும் ஆனந்தமடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பாட்டில்களை பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போனவர்களை தடுத்து நிறுத்தி பாட்டில் பெட்டிகளை கைப்பற்றினர்.