காங். ஆட்சி-ஸ்டாலின் முன்னிலையில் ஈவிகேஎஸ் பேச்சு!
சென்னை: காங்கிரஸ் கட்சி 1967ல் விட்ட ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குமரி அனந்தன் தனது 77 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஆசையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 77வது பிறந்த தினவிழா, சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, குமரி அனந்தன் எழுதிய 18 புத்தகங்கள் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு குமரி அனந்தன் நூல்களை வெளியிட்டார்.
முக ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இந்த விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கூறுகையில், "பொதுவாக 25, 55, 65, 75வது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. குமரி அனந்தன் 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறாரே என, யோசித்தேன்.
அதாவது 67ல் விட்ட காங்கிரஸ் ஆட்சியை 77ல் பிடித்து விட வேண்டும் என நினைத்து தான் இந்த விழாவை கொண்டாடுகிறார் போலும்.
காமராஜர் காலத்தில் திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன் போன்றவர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர்.
ராகுல் தமிழகத்தில் விஜயம் செய்த பின், பெரும்பாலான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர்.
மொழியை மட்டும் பிடித்துக் கொள்ளக்கூடாது!
மொழி மீது யாருக்கும் வெறி இருக்கக் கூடாது. ஆங்கிலத்தில் பேசினால் அதுவும் ஒரு ஓசை. காபி என்பதை கொட்டை வடிநீர் என்று மொழி பெயர்ப்பது தேவையற்றது. அதற்காக நான் தமிழ் மொழி மீது பற்று இல்லாதவன் அல்ல. மொழியை மட்டும் பிடித்துக் கொண்டு பேசக் கூடாது.
இளைய சமுதாயம் அடுத்த தலைமுறையில் முன்னேறுவதை பற்றி சிந்திக்க வேண்டும்..." என்றார்.