கள்ளக்காதல் தோல்வி- குழந்தையைக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்!
கோவை: கள்ளக் காதல் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த பெண், தன்னுடைய 11வயது குழந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்து இறந்தார்.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. வயது40. இவர் பீளமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
குடும்ப பிரச்னை காரணமாக இவர் தனது கணவர் சுரேஷ்குமாரை பிரிந்து வாழ்கிறார். அவருடன் 11 வயது பெண் குழந்தை சுரேகா இருந்தார்.
இந்நிலையில் கோவையில் தனியார் கிளினிக் நடத்தி வந்த தரணிக்குமார் என்ற மருத்துவருடன் ரேணுகாதேவிக்கு தொடர்பு ஏற்பட்டது.
தரணிக்குமாரும் ஏற்கனவே திருமணமானவர். எனினும், ரேணுகாவை திருமணம் செய்துகொள்வதாக தரணிக்குமார் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் தரணிக்குமார் ரேணுகாவை சந்திப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். அதோடு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.
இதனால் ரேணுகா - தரணிக்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. தரணிக்குமார் தன்னை புறக்கணிப்பதை உணர்ந்த ரேணுகா தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
நேற்று அதிகாலை, மகளுக்கு மயக்க ஊசிபோட்டு துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தானும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ரேணுகா தற்கொலை செய்யும் முன்பு தன் சகோதரி விஜயலட்சுமிக்கு போன் செய்து இதனை தெரிவித்துள்ளார். பதறிப்போன விஜயலட்சுமி வெளியூரில் இருந்தபடி எவ்வளவோ முயற்சித்தும் தடுக்க முடியவில்லை.
ரேணுகா தன்னுடைய சாவுக்கு, டாக்டர் தரணிக்குமார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தரணிக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications