மீன் குழம்பு கிடைக்குமா?-பென்னாகரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம்

பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து விஜயகாந்த் பல்வேறு இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் நான் அதிகம் சினிமா படப்பிடிப்புக்காக வந்துசென்ற இடங்களில் ஒகேனக்கல்லும் ஒன்று. அதனால் இந்தப் பகுதி எனக்கு நன்கு பரிச்சயமான பகுதி. இந்தப் பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகள் என் மீது பாசம் வைத்து களியும், மீன்குழம்பும் செய்து கொண்டுவந்து தருவார்கள்.
இப்போதும் அந்த பரிசல் ஓட்டிகள் என்மீது அதே பாசத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் களியும் மீன் குழம்பும் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு விலைவாசி விஷம்போல் உயர்ந்துகொண்டே போகிறது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ், திமுக, பாட்டாளி மக்கள் கட்சி என மாறி மாறி அந்த கட்சியின் வேட்பாளர்கள் ஜெயித்தார்கள். ஆனால் தொகுதி வளர்ச்சிக்காக எந்த ஒரு பணியையாவது அவர்கள் செய்தார்களா, என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும்.
இப்போது இந்த தேர்தலுக்காக அவர்கள் எல்லோரும் உங்களிடம் ஓடோடிவந்து உங்களுக்கு குடிக்க தண்ணீர் தருவேன், சாலை வசதி செய்து தருவேன், அடிப்படை வசதி செய்து தருவேன் என்று கூறி உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். முன்பு ஜெயித்திருந்தபோதே அதை எல்லாம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே.
இன்று உங்களை தேடி வந்து ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். சாதனையை செய்தவர்கள் எதற்காக பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க வேண்டும். இந்த தேர்தலில் பணத்தை நம்பி இரண்டு கட்சிகளும், இனத்தை நம்பி ஒரு கட்சியும் போட்டியிடுகின்றன. நான் ஒருவன்தான் ஜனத்தை (மக்களை) நம்பி இந்த தேர்தலில் நிற்கிறேன்.
இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகளாக பாமகவை சேர்ந்தவர்தான் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இப்போது இனத்தை சொல்லி உங்களிடம் வரும் அவர்கள் மத்தியில் ரயில்வே அமைச்சராக இருந்தபோதும், சுகாதார அமைச்சராக இருந்தபோதும் இந்த தொகுதியைச் சேர்ந்த அவர்கள் இனத்தை சேர்ந்த எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார்?. இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அப்போதுதான் நாங்கள் எந்தளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications