பெங்களூர் தொழிலதிபர் மீது ரூ.65 கோடி மோசடி புகார்!
சென்னை: வீடு கட்டி தருவதாகக் கூறி ரூ.65 கோடியை சுருட்டிய பெங்களூர் தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெங்களூரை சேர்ந்தவர் மனோஜ் நம்பூரு. அலையன்ஸ் புராஜக்ட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சென்னை பாடியில் நடத்தி வருகிறார்.
19 மாடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் விளம்பரப்படுத்தியிருந்தார். இதில் வீடு கேட்டு சென்னையில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை முன் பணமாகக் கொடுத்தனர்.
ஆனால் கட்டுமான பணி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை மனோஜ் நம்பூரு சென்னை சவேரா ஓட்டலில் நேற்று இரவு நடத்தினார். சி.எம்.டி.ஏ. ஒப்புதல் கொடுக்காததால் வீடுகட்ட முடியவில்லை என்று மனோஜ் நம்பூரு விளக்கம் அளித்தார்.
இதை ஏற்காத மக்கள் ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவரை சுற்றி வளைத்தனர். இதனால் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராயப்பேட்டை உதவி கமிஷனர் வசந்த குமாரி தலைமையில் போலீசார் விரைந்துவந்தனர். வாடிக்கையாளர்களின் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் மனோஜ் நம்பூருவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று போலீஸ் தரப்பில் உறுதி கொடுத்தனர்.
ரூ.65 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், மனோஜ் நம்பூரு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications