முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழு - மத்திய அரசு அரசாணை வெளியிடவில்லை!
டெல்லி: முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு நியமனம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை என்று அக்குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முன்வரவில்லை.
அதற்கு மாறாக, கேரள அரசு தனிச் சட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு பின்னர் 5 பேர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இதில் இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச், முல்லை பெரியாறு அணை நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.
இந்தக் குழுவில் தமிழக, கேரள அரசுகள் சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், குழு நியமனம் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு ஒரு மாதம் அவகாசம் கோரியது.
அதே சமயம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏ.எஸ்.ஆனந்த் குழுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
அணை தொடர்பாக, ஏற்கனவே மத்திய நீர்வளக்குழு ஆய்வு செய்த பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மதிக்க வேண்டும் என்றும், இந்த சூழலில் மீண்டும் ஒரு குழு அமைப்பது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியது.
இதுகுறித்து அரசியல் சட்ட பெஞ்சிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று நீதிபதி டி.கே.ஜெயின் தெரிவித்தார்.
இந்த நிலையில், உச்சநீநிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு தலைமை வகிக்கும் ஏ.எஸ்.ஆனந்த், டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோது,
'தனது குழு தொடர்பாக மத்திய அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. அதனால் தனக்கு எந்த பின்னடைவும் இல்லை' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications