நெல்லை அருகே கோர விபத்து - 4 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே கார் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதியதில் தூத்துக்குடி வியாபாரி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் நாடார். இவர் இரும்பு கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜோதி. நேற்று காலை செல்வராஜ் தனது மனைவி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த மின்னல் கொடி, அவரது மகள் கார்த்திகா ஆகியோருடன் வாடகை காரில் களக்காட்டில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
காரை கயத்தாறு அருகே உள்ள இலந்தைகுளத்தை சேர்ந்த டிரைவர் செல்வின்துரை என்பவர் ஓட்டி வந்தார். வல்லநாடு அருகே உள்ள முருகன்புரத்தில் வரும்போது எதிரே வந்த மினி லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் அடையாளம் தெரியாமல் நொறுங்கியது. இந்த விபத்தில் செல்வராஜ், மின்னல்கொடி, கார்டிரைவர் செல்வின் துரை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
செல்வராஜூன் மனைவி ஜோதி மற்றும் கார்த்திகா, மினி லாரி டிரைவர் தேவசகாயம் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர்.
தகவல் கிடைத்த உடன் போலீசார் சென்று இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டு நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த கார்த்திகா, ஜோதி தேவசகாயம் ஆகியோருக்கு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலனின்றி ஜோதி மருத்துவமனையில் இறந்தார். தேவசகாயம், கார்த்திகா ஆகியோர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் வல்லநாட்டில் இருந்து தெய்வசெயல்புரம் வரை சாலை மிகவும் குறுகலாகவும், வளைவுடனும் உள்ளது.
இதனால் இந்த வழித்தடத்தில் புதிதாக வரும் டிரைவர்கள் வளைவுகள் இருப்பது தெரியாமல் செல்லும்போது விபத்து நேரிடுகிறது.
மார்ச் மாதத்தில் நடந்த இரண்டாவது கோர விபத்து இது. இந்த மாதம் மட்டும் 7 பேர் இதுபோன்ற விபத்தில் உயிர் இழந்தனர்.












Click it and Unblock the Notifications