மீண்டும் பெட்ரோல், டீஸல் விலை உயர்கிறது!

கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதாகக் கூறி கடந்த மாதம்தான் 27-ந்தேதி பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.71, டீசல் லிட்டருக்கு ரூ.2.55 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிதளவு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யூரோ 3 என்ற நிலையிலிருந்து யூரோ-4 என்ற நிலைக்கு பெட்ரோல், டீசல் தரம் உயர்த்தப்படுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.
புகை குறைவாக வெளியிடும் பெட்ரோல் - டீஸல்
தற்போது இந்தியா முழுவதும் யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் என்பது யூரோ-3 ரக பெட்ரோல், டீசலை விட அதிகம் சுத்திகரிக்கப்பட்டதாகும்.
யூரோ-3 ரக பெட்ரோல், டீசலில் சல்பர் மூலப் பொருட்களின் சேர்க்கை அதிக அளவில் இருக்கும். குறிப்பாக 10 லட்சம் சல்பரில் 350 என்ற அளவுக்கு சல்பர் மூலப் பொருட்கள் இருக்கும். இதனால் யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் பயன் படுத்தும் வாகனங்கள் அதிக புகையை வெளியிடும்.
யூரோ-3 ரக பெட்ரோல், டீசல் காரணமாக சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. காற்று அதிக அளவில் மாசுபடுவதாக கூறப்பட்டது. இதை தடுக்க வேண்டுமானால் நன்கு சுத்திகரிக்கப்பட்ட யூரோ-4 ரக பெட்ரோல், டீசலை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் யூரோ-4 ரக பெட்ரோல், டீசலை பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பெட் ரோலியம் அமைச்சகம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது.
அதன்படி டெல்லியில் நாளை (புதன்) முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் விற் பனை தொடங்குகிறது.முதல் கட்டமாக சென்னை உள்பட 13 நகரங்களில் வரும் 1-ந் தேதி முதல் யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் அறிமுகமாகிறது. யூரோ-4 ரக பெட்ரோல், டீசலில் சல்பர் மூலப் பொருட்களின் சேர்க்கை மிக மிகச் குறைவாக இருக்கும் இதன் காரணமாக அதிக புகை வராது. சுற்றுச் சூழலும் கெடாது.
இந்த யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் சுத்திகரிப்புக்காக நாடெங்கும் உள்ள எண்ணை நிறுவனங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சீரமைப்புப் பணிகளுக்கு மாநில எண்ணை நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளன.
யூரோ-4 ரக பெட்ரோல், டீசல் சுத்திரிப்புக்காக எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து செலவழிக்க வேண்டியுள்ளதால் அந்த செலவை ஈடுகட்ட பெட்ரோல் - டீஸல் விலையை உயர்த்துவதாக பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 40 பைசா வரை இந்த விலை உயர்வு இருக்கும்.
இதில் 20 பைசா எண்ணை நிறுவனங்களுக்கும், 20 பைசா டீலர்களுக்கும் கிடைக்கும். இந்த விலை உயர்வு ஏப்ரல்-1ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கியாஸ் விலையும் உயர்கிறது!
இதற்கிடையே சமையல் கியாஸ் விலை கணிசமாக உயரும் என்று தெரிகிறது. சமையல் கியாஸ் விலை ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களின் பரிந்துரைக்கு ஏற்ப கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த நிறுவனங்கள், சமையல் கியாஸ் விலையை 30 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன. அதை மத்திய அரசு ஏற்றுள்ளது.
அதிகபட்சம் 100 ரூபாய் வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications