தென்காசியில் வடநாட்டு துப்பாக்கிகளோடு 8 பேர் கைது
தென்காசி: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வடமாநிலங்களில் இருந்து கள்ள துப்பாக்கிகளை வாங்கி வந்து விற்பனை செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தக் கும்பல் குறித்து எஸ்.பி. ஆஸ்ரா கார்கிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு நடைபெற்று வந்தது. நேற்று மதுரை ரோட்டில் குத்துகல்வலசை அருகே வேகமாக வந்த காரை மடக்கி சோதனை போட்டனர்.
அந்த காருக்குள் இருந்த தலையணைக்குள் 2 கைத் துப்பாக்கிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தலைவன் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், செல்வகுமார், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பூசைப்பாண்டியன், முத்து, மகேஷ், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ்ராஜ், துரைப்பாண்டியன், ஜெயக்கொடி ஆகிய 8 பேர் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்ததில், மத்திய பிரதேசத்தில் இருந்து கள்ள துப்பாக்கிகளை வாங்கி வந்து நெல்லை மாவட்டத்தில் விற்பனை செய்ய கடந்த 15ம் தேதி வாங்கி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கார்க் நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.
பிடிபட்ட துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.