Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி மருந்து விற்பனை-4 புரோக்கர்களுக்கு போலீஸ் வலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலாவதியான போலி மருந்துகள் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்ட 7 பேரில் இருவர் சரண் அடைந்துள்ளனர். மருந்து கம்பெனி அதிபர்கள் உட்பட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, காலாவதி மருந்துகளை குப்பையில் இருந்து மருந்து கடை வரை கொண்டு சேர்க்கும் வேலையில் 4 பேர் புரோக்கராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 'ரீநெர்வ்' என்ற மாத்திரையில் அதன் 'எக்ஸ்பைரி' தேதியை நீக்கிவிட்டு போலியாக புதிய தேதியை அச்சடித்து சென்னையில் விற்பனை செய்யப்படுவது பற்றி பல புகார்கள் தொடர்ந்து வந்தன.

கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தினோம். அதில், காலாவதியான 'ரீநெர்வ்' மாத்திரைகள் விற்பனை செய்ததும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட மெடிக்கல் ஸ்டோர்கள் மற்றும் மருந்து விற்பனை குடோன்களில் சோதனை நடத்தப்பட்டன.

சென்னையில் காலாவதியான 'ரீநெர்வ்' மாத்திரையின் தேதியை திருத்தி விற்பனைக்கு தயாராக வைத்து இருந்தது தொடர்பாக 7 பேர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மருந்து மொத்த விற்பனையாளர்கள் (மருந்து கம்பெனி அதிபர்கள்) பிரதீப் சோர்டியா, மீனாட்சி சுந்தரம், மருந்து விற்பனை கண்காணிப்பாளர் கே.பாஸ்கரன், மருந்து விற்பனை முகவர் சேகர், வீட்டில் மருந்து விற்பனை செய்பவர்களான சஞ்சய் குமார், ரவி என்கிற பிரபாகரன், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 7 பேர்களும் தான் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.

இதில் காலாவதியான மருந்துகளை வேனில் ஏற்றி வந்து குப்பை மேட்டில் கொட்டாமல் அதனை விற்பனை செய்த டிரைவர் வெங்கடேசன், விலைக்கு வாங்கிய முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய ஜான் பாஷா என்ற முக்கிய நபரை போலீசார் நேற்று வேலூரில் கைது செய்ததுள்ளனர்.

இவர் தான் ரவியிடம் இருந்து போலி மருந்துகளை வாங்கி சஞ்சய்குமாருக்கு சப்ளை செய்வார் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான ஜான்பாஷா நேற்று இரவு சென்னை அழைத்துவரப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களை பிடிப்பதற்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த 4 பேரின் செல்போன் நம்பர்கள் கிடைத்துள்ளன. காலாவதி மருந்துகளை விற்பனை செய்வதில் இவர்கள் 4 பேரும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் நம்பர் உதவியுடன் 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பயப்படவேண்டாம்: போலீஸ்

'ரீநெர்வ்' மாத்திரையைப் போல், 'பெனட்ரீல்' இருமல் மருந்தும் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து கடலூருக்கு திருப்பி அனுப்பிய இந்த மருந்துகளை மாதிரிக்காக எடுக்கப்பட்டு 2,700 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி போலீசார் தெரிவிக்கையில், 'இந்த பிரச்சினையில் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. காலாவதியான 'ரீநெர்வ்' மாத்திரைகள் சென்னையை தாண்டிச்செல்லவில்லை.

எந்த மருந்து மீதாவது சந்தேகம் இருந்தால் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு தொலைபேசி மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

காலாவதி மருந்துகளைக் கொட்டும் வியாபாரிகள்:

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தும் வேலைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மருந்துக் கடை வியாபாரிகள், காலாவதியான மாத்திரை, மருந்துகளை சாலைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் கொட்டுவது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சேலம் அருகே சீலநாயக்கன் பட்டியில் சாலையோரம் பெருமளவிலான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி ஆராய்ந்தபோது அவை அனைத்தும் காலாவதியான மருந்து, மாத்திரைகள் எனத் தெரிய வந்தது.

பின்னர் அவற்றை போலீஸார் ஒரு இடத்தில் போட்டு தீவைத்துக் கொளுத்தினர்.

அதிகாரிகளிடம் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மருந்துக் கடை வியாபாரிகள் இதுபோல செய்வதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+