அரசு அதிகாரிகளுக்கு மீண்டும் எக்ஸிகியூடிவ் க்ளாஸ் வசதி!
டெல்லி: பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு அதிகாரிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் பயண எக்ஸிகியூடிவ் க்ளாஸ் வசதியை மீண்டும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் இனி விமானத்தில் அரசு அதிகாரிகள் மீண்டும் எக்ஸிகியூடிவ் க்ளாஸ் எனும் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அரசு அதிகாரிகள் விமானத்தில் சாதாரண வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பொருளாதார சரிவு மீட்சி பெற்றுள்ளதால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களில் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து முதல் வகுப்பில் பயணம் செய்யலாம்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் உறவினர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாக விமானங்களில் கூட்டிச் செல்லலாம் என்ற சலுகையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.