மார்ச் 27ம் தேதி எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜராவார் மோடி-வக்கீல் விளக்கம்
அகமதாபாத்: உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்பு மார்ச் 27ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறித்தான் சம்மன் வந்துள்ளது. எனவே அன்றைய தினம் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று மோடியின் வக்கீல் கூறியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மோடிக்கு தொடர்பு உண்டு என்றும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியும், ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம். இந்தக் குழு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி மோடிக்கு சம்மன் அனுப்பியது.
மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியானதால் அன்றைய தினம் மோடி ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து மோடி விளக்குகையில், மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி எனக்கு எந்த சம்மனும் அளிக்கப்படவில்லை. அது தவறான தகவல். இப்படி தகவல் பரப்பப்பட்டதில் சதி உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மோடியின் வக்கீல், இந்த விவகாரம் குறித்து விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மோடிக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. மார்ச் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றுதான் சம்மன் அனுப்பபப்பட்டுள்ளது.
எனவே அந்த சம்மனை முதல்வர் மோடி மதிப்பார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றார்.
இதந் மூலம், மார்ச் 27 அல்லது அதற்கு முன்பே மோடி விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications