கொல்கத்தா தீ விபத்தில் பலி 27 ஆக உயர்ந்தது
கொல்கத்தா: கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது கவலைக்கிடமாக உள்ளனர்.
கொல்கத்தாவின் பிரபலமான பூங்கா வீதியில் அமைந்துள்ளது ஸ்டீபன் கோர்ட் என்ற அடுக்குமாடி கட்டடம். 150 ஆண்டுகள் பழமைமிக்க இந்தக் கட்டடத்தில் பல்வேறு கடைகள், ஹோட்டல், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கட்டடத்தின் முதல் தளத்தில் லிப்ட் உள்ள பகுதியில் தீப் பிடித்தது. தீ மளமளவென மேல் தளங்களுக்குப் பரவியது.
ஹோட்டல் மற்றும் கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் தீ பரவுவதை பார்த்து அலறியடித்துக் கொண்டு அங்குமிங்குமாக சிதறி ஓடி தப்ப முயன்றனர்.
மேல்நோக்கி தீ பரவியதால் அவர்களால் கீழே வர முடியவில்லை. இதனால் மேல் தளங்களுக்கு ஓடினர். இப்படி ஓடுகையில் பலர் மிதிபட்டு காயமடைந்தனர். சிலர் தீக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்தனர்.
சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் 15 தீயணைப்பு வண்டிகளுடன் தீயை அணைக்க முயன்றனர். உயரமான ஏணிகளை நிறுத்தி 5 மற்றும் 6வது தளத்தில் சிக்கியிருந்தவர்களை ஜன்னல்கள் வழியாக மீட்டனர்.
ஸ்டீபன் கோர்ட் கட்டடத்தின் உள்பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. இதனால் தீ வேகமாகப் பரவிவிட்டது.
இந்த விபத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்த கடைகள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல் எரிந்து சாம்பலாகிவிட்டன.
மாலை 7 மணிக்குத் தான் தீ அணைக்கப்பட்டது. பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் மாடியிலிருந்து குதித்து காயமடைந்து உயிரிழந்தனர்.
6வது மாடியில் தீயில் கருகிய நிலையில் 4 பேரின் உடல்கள் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டன.
இன்று காலையும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications