திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
சென்னை: சென்னை அடையாறில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். தாலியை கழற்றி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய அவர், கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சென்னை அடையாறில் வசிப்பவர் சங்கரமோகன் (30). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி பெயர் வித்யா (26). வித்யாவும் பொறியியல் படித்துவிட்டு அடையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.
திருமணமான 4 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர்.
விரக்தி அடைந்த வித்யா நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு ஊஞ்சல் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இரவு வீடு திரும்பிய சந்திரமோகன் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் மனைவி வித்யா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் நேரில் வந்து விசாரித்தார்கள். வித்யாவின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வித்யா சாவதற்கு முன்பு தாலியை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு தனது கணவர், தந்தை மற்றும் கல்லூரி தோழன் ஆகியோருக்கு உருக்கமாக தனித்தனியாக 3 கடிதங்கள் எழுதி வைத்திருந்தார்.
கணவர் சந்திரமோகனுக்கு எழுதிய கடிதத்தில், 'நம்முடைய வாழ்க்கை 4 மாதத்தோடு முடிந்துபோகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்தபோதெல்லாம் நீங்கள் கோபப்பட்டு என்னை திட்டினீர்கள். சந்தேகமும் கொண்டீர்கள்.
இதனால் தான் நான் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். நீங்கள் 2-வது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள். உங்கள் 2-வது திருமணத்துக்கு பரிசாக என்னுடைய தாலியை கழற்றி வைத்துவிட்டு செல்லுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வித்யாவின் கணவர் சந்திரமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.