'டோக்கன்' கொடுத்து பணம் தருகிறார்கள்-ராமதாஸ்
தர்மபுரி: வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து, பென்னாகரம் தொகுதியின் எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டருக்கு அப்பால், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேச்சேரியில் வைத்து டோக்கனைக் காட்டு வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வினியோகிக்கப்படுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், பென்னாகரம் இடைத்தேர்தலில் தொடர்ந்து முறைகேடுகள், தேர்தல் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தலுக்கு பொறுப்பு வகிக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டு உள்ள பார்வையாளர்களுக்கும் உள்ளது. ஆனால் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இந்த இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவே கூறியிருக்கிறார்.
மேலும் பென்னாகரத்தில் ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை, வாக்காளர்கள் பணம் பெற்றதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் தொகுதியில் எல்லா கிராமத்திலும், எல்லா தெருக்களிலும், எந்த வீடாக இருந்தாலும் கேட்டால் எல்லா வாக்காளர்களும், ஓட்டுப்போட பணம் கொடுத்ததை ஒப்புக் கொள்வார்கள்.
வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து, அந்த டோக்கனை தொகுதியின் ஒரு எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டருக்கு அப்பால், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேச்சேரியில் வைத்து வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வினியோகிக்கப்படுகிறது என்பதை சில பத்திரிகைகள் எழுதியுள்ளன.
தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் நினைத்தால் 'பொறி' வைத்து இதைப் பிடிக்க முடியும்.
சுதந்திரம் வாங்கி 62 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவில்லை. இப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார்கள்.
அரிசி, உப்பு, பருப்பு, எண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை இந்த ஆட்சியில் 300 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.
இலவச டி.வி. கொடுத்துவிட்டு, மாதம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அரசே கேபிள் டி.வியை நடத்தினால் கேபிள் இணைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்க முடியும்.
திமுகவினரின் தில்லுமுல்லுகளை மீறி இந்தத் தேர்தலில் பாமக நிச்சயம் வெற்றி பெறும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்யப்படுவதாக நாங்கள் ஏற்கனவே புகார்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அதில் எவ்வளவு ஓட்டுகள் பதிவான விவரம் தெரிய வரும் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். அந்த மாற்றங்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
மேலும் பா.ம.க. கோரியபடி இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் உறுதி கூறியுள்ளது. அதனை தேர்தல் கமிஷன் நிறைவேற்றும் என நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.