Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்எஸ்எல்சி-மாறிய வினாத்தாள்கள்- கூடுதல் மதிப்பெண் தர உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்எஸ்எல்சி மற்றும் மெட்ரிக் பாடத்துக்கான வினா தாள்களை மாற்றி வழங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு எஸ்எஸ்எல்சி மற்றும் மெட்ரிக் பொதுத்தேர்வுகள் தொடங்கின. வழக்கமாக இந்த இரு தேர்வுகளும் ஒரு நாள் முன்பின்னாக தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு இரு தேர்வுகளும் ஒரே நாளில் தொடங்கின. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.

சில பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, மாணவ, மாணவிகளும் மெட்ரிக் மாணவ, மாணவிகளும் ஒரே வகுப்பறையில் தேர்வு எழுதினார்கள்.

எஸ்எஸ்எல்சி, மாணவர்களுக்கு மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட வினாத்தாள்களும், மெட்ரிக் மாணவர்களுக்கு மெட்ரிக் தேர்வு பாடத்திட்ட வினாத்தாள்களும் தனித்தனி பார்சலில் இருந்து பிரித்து வழங்கப்பட்டன.

சில மையங்களில் எதிர்பாராத விதமாக எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மெட்ரிக் வினாத்தாளும் மெட்ரிக் மாணவர்களுக்கு எஸ்எஸ்எல்சி வினாத்தாளும் மாற்றி வழங்கப்பட்டு விட்டன.

வினாத்தாளின் மேலே எஸ்எஸ்எல்சி வினாத்தாள், மெட்ரிக் வினாத்தாள் என்று குறிப்பிடாமல் இருந்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக தெரிகிறது.

எஸ்எஸ்எல்சி வினாத்தாள் வெள்ளை தாளில் கறுப்பு மையாலும், மெட்ரிக் வினாத்தாள் வெள்ளைத்தாளில் நீலநிற மையாலும் அச்சிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி அறியாமல் வினாத்தாளை மாற்றி கொடுத்து விட்டனர்.

இரு தரப்பினருக்குமே தமிழ் பாடத்திட்டம் ஒரே மாதிரி இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்படவில்லை.

ஆனால் கேள்விகளை கூர்ந்து கவனித்தபோது சிலருக்கு அவை கடினமாக இருந்துள்ளது. ஆனாலும் பரீட்சையை எழுதி முடித்து விட்டனர்.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்களுக்குள் கலந்து பேசி விவாதித்த பிறகுதான் தங்களுக்கு தவறான வினாத்தாளுக்கு வழங்கப்பட்டது தெரிய வந்தது.

இதனால் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு மதிப்பெண் குறைந்து விடுமே என்று மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்கள்.

நடந்த சம்பவம் பற்றி தங்கள் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தவறு நடந்த பள்ளிகளில் பெற்றோர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். சில இடங்களில் மறியல்கள் நடந்தன.

இதுபற்றி உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மையங்களில் மாணவர்களின் விடைத்தாள்களை தனியாக வைத்திருக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தவறு நடந்த நாகர்கோவில் பள்ளி தேர்வறையில் கண்காணிப்பாளராக ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை பணிபுரிந்தார். அவர் நேற்று சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம், நாகர்கோவில், குழித்துறை, பாளையங்கோட்டை, அறந்தாங்கி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற குளறுபடி ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் ஒரு சில இடங்களில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு மாநில பாடத்திட்ட வினாத்தாளும், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வினாத்தாளும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 30 மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது விடைத்தாள்கள் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு இன்று வந்து சேரும்.

இது போன்ற தவறுகள் ஏற்படும் பட்சத்தில் தமிழ்-2ம் தாள் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு எழுதிய அந்த மாணவ- மாணவிகள் பள்ளியில் பெறும் மதிப்பெண்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அவர்களது விடைத்தாள் கடினமான முறையில் இல்லாமல் தளர்த்தி திருத்தப்படும். தமிழ் இரண்டாம் தாளில் அவர்கள் பெறும் மதிப்பெண் முக்கியமாக கருதப்படும். அதை கணக்கிட்டு தமிழ் முதல் தாளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூடுதல் மார்க் வழங்கப்படும்.

மெட்ரிக்குலேசன், மாநில பாட வாரியம் கேள்வித் தாளில் உள்ள பொதுவான கேள்வியை தவிர மற்ற கேள்விகள் இருந்தால் அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையே, காஞ்சீபுரத்தில் எஸ்.எஸ். கே.வி. மெட்ரிக்குலேசன் பள்ளியில் அறை எண்.6ல் தேர்வு எழுதிய 40 மாணவர்களுக்கும், பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் 43-வது எண் தேர்வு அறையில் எழுதிய 10 மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கும் 10 மாநில பாடவாரியான மாணவர்களுக்கும் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+