தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்கள்- போட்டியிட தங்கபாலு, இளங்கோவன் மோதல்
சென்னை: தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதில் போட்டியிட காங்கிரஸ் கட்சி கோஷ்டித் தலைவர்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளதாம்.
தமிழகத்தில் 6 பேர் உள்பட நாடு முழுவதும் 52 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்பட 19 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடனும், மற்றவர்களின் பதவிக்காலம் ஜூலை 4ம் தேதியுடனும் முடிகிறது.
அனைத்து காலியிடங்களுக்கும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 6 இடங்களில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள இரு இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல முடியும்.
இதில் திமுக 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஒரு இடத்தைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியில் பெரிய அடிதடியே நடைபெறும் போலத் தெரிகிறது.
தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் என நான்கு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் முட்டி மோத ஆரம்பித்துள்ளனராம்.
தங்கபாலு கடந்த லோக்சபா தேர்தலில் சேலத்தில் போட்டியிட்டுத் தோற்றார். இளங்கோவன் கோபிச்செட்டிப்பாளையத்தில் வீழ்த்தப்பட்டார். பிரபு கோவையில் தோல்வியுற்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி. ஆகி விட அவர்கள் துடிப்புடன் களம் இறங்கியுள்ளனர்.
இதேபோல மயிலாடுதுறை தொகுதியில் தோல்வியைத் தழுவிய மணிசங்கர அய்யர் சமீபத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.