ஆசிரமத்துக்கு தனியாகப் போவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்: திருவாவடுதுறை ஆதீனம்
ராமேஸ்வரம்: ஆசிரமங்களுக்குப் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அப்படிச் செல்லும் நிலையை அவர்கள் தவிர்க்க வேண்டும் எனறு திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமேஸ்வரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும்.
எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக் கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர்.
செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும் என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications