இளைஞர் காங். தேர்தலில் மோதல் - சத்தியமூர்த்தி பவன் ரணகளமானது - நாற்காலிகள் வீச்சு
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலை மீண்டும் நடத்திட வேண்டும் என்று கூறி அக்கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் தலைமையகத்தில் பெரும் வன்முறையில் இறங்கினர். நாற்காலிகளை தூக்கி வீசிப் போராட்டம் நடத்தியதால் பவன் போர்க்களமானது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற தொகுதிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடந்தது.
மத்திய சென்னைக்கு உள்பட்ட சேப்பாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது.
காலை முதல் மாலை வரை தேர்தல் அமைதியாகத்தான் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்து பெட்டிகளில் போட்டனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. சேப்பாக்கம் தொகுதியில், ரியாஸ் என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டதும் ரியாஸை எதிர்த்துப் போட்டியிட்ட அப்பாஸ் என்பவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரி சத்தம் போட்டனர்.
பின்னர் அது வன்முறையாக மாறியது. தேர்தலை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை செய்தனர். சத்தியமூர்த்தி பவன் அலுவல கண்ணாடிகளையும் அடித்து நொறுக்க முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். சத்தியமூர்த்தி பவன் கதவு மூடப்பட்டது.
ஆனாலும் வெளியில் இருந்தபடி ரகளை தொடர்ந்தது. அவர்களை காங்கிரஸ் நிர்வாகிகளும், போலீஸாரும் அமைதிப்படுத்தினர்.
பின்னர் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போதும் ரியாஸ் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாஸ் கோஷ்டியினர் மீண்டும் ரகளையில் குதித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications