ஒரு தலைக்காதல்: குழந்தையை கடத்திய ஊனமுற்ற வாலிபர்
சென்னை: திருமணமான பெண்ணின் மீது ஒரு தலைக் காதல் கொண்ட ஊனமுற்ற வாலிபர், அந்தப் பெண் தனது கணவரை விட்டு விட்டு தன்னுடன் வர மறுத்த்தால் கோபமடைந்து அப்பெண்ணின் குழந்தையைக் கடத்திச் சென்றார். குழந்தையை மீட்ட போலீஸார் அந்த நபரைக் கைது செய்தனர்.
சென்னை ஐசிஎப் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் உடல் ஊனமுற்றவர். இதனால் அவர் மீது அனுதாபம் கொண்டு விமலா நட்புடன் பழகி வந்தார். ஆனால் இதை சதீஷ் குமார் வேறு மாதிரியாக எடுத்துக் கொண்டு விமலா மீது மோகம் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று விமலாவின் குழந்தையைக் காணவில்லை. கூடவே சதீஷ்குமாரும் காணாமல் போய் விட்டார்.
அதிர்ச்சி அடைந்த விமலா, சந்தேகத்தின்பேரில் சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பேசிய சதீஷ்குமார், நான்தான் குழந்தையைக் கடத்தி வந்துள்ளேன். நீ என்னுடன் வந்து விடு. இல்லாவிட்டால் குழந்தையைக் கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார் சதீஷ்குமார்.
இதையடுத்து விமலா போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் குழந்தையை பத்திரமாக மீட்க போலீஸார் களம் இறங்கினர்.
சதீஷ்குமார் செல்போன் எண்ணைக் கொண்டு அவர் எங்கிருக்கிறார் என்பதை ஆராய்ந்தபோது திருவண்ணாமலையில் இருப்பது தெரிய வந்த்து.
இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்து சென்றனர். அப்போது பஸ் நிலையப் பகுதியில் குழந்தையுடன் சதீஷ்குமார் இருப்பதைக் கண்டுபிடித்து அவரைப் பிடித்தனர். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications