ஜனநாயக அதிமுக என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கியவருக்கு தர்ம அடி!
நெல்லை: நெல்லையில் ஜனநாயக அதிமுக என்ற புதிய கட்சி தொடங்கியவரை அதிமுகவினர் அடித்து உதைத்தனர்.
பாளையங்கோட்டை மனக்கவாலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் செல்வம்.
அதிமுக பிரமுகரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி ஜனநாயக அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு இவர்தான் தலைவர்.
தான் தொடங்கிய புதுக்கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் செல்வம் ஈடுபட்டார்.
இது அதி்முகவை சேர்ந்த சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நெல்லை சிந்துபூந்துரையை சேர்ந்த அதி்முக பிரமுகர்கள் லட்சுமணன், பழனி ஆகியோர் சாமதானபுரத்தில் நின்று கொண்டிருந்த செல்வத்திடம் புதிய கட்சியை கலைக்க வேண்டும் என கூறினர்.
அதற்கு செல்வம் மறுக்கவே ஆத்திரமடைந்த லெட்சுமணன், உள்பட 3 பேர் செல்வத்தை கம்பால் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த செல்வம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications