சேலம், நெல்லையைத் தொடர்ந்து கரூரிலும் சாலையில் கொட்டப்பட்ட காலாவதி மருந்து, மாத்திரைகள்
கரூர்: காலாவதியான மருந்து, மாத்திரைகளை குப்பைத் தொட்டியிலும், சாலையோரங்களிலும் கொட்டுவது அதிகரித்து வருகிறது. கரூரில் நான்கு இடங்களில் இவை கொட்டப்பட்டிருந்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள காலாவதி மருந்து, மாத்திரை விவகாரத்தைத் தொடர்ந்து இதுபோன்ற மருந்துகளின் விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறையினரும், காவல்துறையினரும் எடுத்து வருகின்றனர்.
மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடைகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து மருந்து வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை வைத்திருப்போர் பெரும் பீதியடைந்து அவற்றை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டி வருகின்றனர்.
சேலம், நெல்லையில் இதுபோல மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கரூர் மாவட்டம் திருமாநிலையூரை அடுத்த ராயனூர் மெயின் ரோட்டில் குவியல் குவியலாக காலாவதியான மருந்து -மாத்திரைகள் கிடந்தன. இப்பகுதியில் மட்டும் 4 இடங்களில், மருந்து -மாத்திரைகளை கொட்டி உள்ளனர்.
இதே போல் கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் காக்காவாடி மெயின் ரோட்டிலும் காலாவதியான மருந்து -மாத்திரைகள் கிடந்தன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications