விதிமுறைகளை மீறினாரா மல்லையா?-விசாரணை ஆரம்பம்
டெல்லி: இந்திரா சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறும் விதத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை சிவில் விமான பாதுகாப்பு குழு (The Bureau of Civil Aviation Security -BCAS) துவங்கியுள்ளது.
ஒரு நிகழ்ச்சிக்காக தனி ஏர் பஸ் விமானத்தில் டெல்லி வந்த தொழிலதிபரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளருமான விஜய் மல்லையா அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஜியாபாத் விமானத் தளத்துக்கு வந்தார்.
அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதே ஹெலிகாப்டரில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தவர், அங்கிருந்த தனது ஏர் பஸ் விமானத்தில் ஏறிப் புறப்பட்டார்.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் அவர் புறக்கணித்து, நேராக தனது தனி விமானத்துக்குள் ஏறிப் பறந்துவிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ளது கிங்பிஷர் நிர்வாகம்.
ஆனால் மும்பையில் தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணி பங்கேற்கும் போட்டியைப் பார்க்கும் அவசரத்தில் விதிமுறைகளக் காற்றில் பறக்கவிட்டார் மல்லையா என்று இந்திரா காந்தி விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் சிவில் விமான பாதுகாப்பு குழு இதுகுறித்த முறையான விசாரணையை தொடங்கியுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications