அசுத்த குடிநீர் - மணப்பாறையில் திமுக கவுன்சிலர்கள் போராட்டம்- பெண்கள் முற்றுகை - பதட்டம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெண்கள் பெரும் திரளாக திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை குடங்களுடன் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால் இந்தத் தண்ணீர் குடிக்கத் தகுதியற்று மிகவும் அசுத்தமாக இருப்பதாக மக்கள் குமுறி வருகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர். நேற்று இரவு முழுவதும் நகராட்சி அலுவலகத்திற்குள்ளேயே தங்கி போராட்டம் நடத்தினர்.
இன்று காலையிலிருந்து 6 திமுக, ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான பெண்கள் காலிக் குடங்களுடனும், அசுத்தமான குடிநீர் அடங்கிய குடங்களுடனும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த நகராட்சித் தலைவர், பெண்களை சமாதானப்படுத்தினார். இன்று மாலைக்குள் குடிநீரை சரி செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். இருப்பினும் திமுக கூட்டணி கவுன்சிலர்களின் போராட்டம் தொடருகிறது.












Click it and Unblock the Notifications