பூமி நேரம் அனுசரிப்பு - முதல்வர் கருணாநிதி வீட்டில் 1 மணி நேரம் விளக்குகள் அணைப்பு
சென்னை: பூமி நேரத்தையொட்டி இந்தியா முழுவதும் நேற்று பல இடங்களில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து மக்கள் அதை அனுசரித்தனர். சென்னையில் முதல்வர் கருணாநிதி வீட்டில் ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன.
நேற்று பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேவையற்ற விளக்குகளை அணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்று பல தரப்பினரும் பூமி நேரத்தை அனுசரிக்க தயாராக இருந்தனர். அதன்படி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்திலும் பூமி நேரத்தை பல தரப்பினரும் அனுசரித்தனர். பல்வேறு நிறுவனங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இது பரவலாக அனுசரிக்கப்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டிலும் ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டு பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது.
பல்வேறு கல்லூரிகளிலும் விளக்குகளை அணைத்து விடுதி மாணவர்கள் பூமி நேரத்தை அனுசரித்தனர்.
இதேபோல நாடு முழுவதும் பூமி நேரம் பரவலாக அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பெரும்பாலானோர் வீடுகளில் விளக்குகளை அணைத்து அனுசரித்தனர். செங்கோட்டை, ஹூமாயூன் சமாதி உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற இடங்களிலும் ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன.
பல்வேறு வர்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள், முக்கியச் சந்தைககள் ஆகியவற்றிலும் ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன.
மேலும் 100 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 கோடி பேர் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்காரர்கள் மட்டும் புறக்கணிப்பு...
அதேசமயம், கிரிக்கெட் உலகினர் மட்டும் இந்த பூமி நேரத்தை புறக்கணித்து விட்டனர். நேற்று கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் பூமி நேரம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது பிரகாசமான விளக்கொளிக்கு மத்தியில் போட்டி சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இந்தப் போட்டியை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் தவிர வீடுகளில் டிவியில் பார்க்கவும் ரசிகர்கள் தவறவில்லை. பூமி நேரத்தை விட போட்டி முக்கியம் என்று கருதிய அவர்கள் பூமி நேரத்தின்போது டிவிகளை அணைக்காமல் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த பூமி நேரம் அனுசரிப்பது தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஆண்டுதோறும் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2008ம் ஆண்டு 35 நாடுகள் இதில் கலந்து கொண்டன. கடந்த ஆண்டு இந்தியாவும் இதில் இணைந்தது.
2009ம் ஆண்டு 4000 நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு இது பல்கிப் பெருகி 100 நாடுகளைச் சேர்ந்த 5 கோடி பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.