புழல் மத்திய சிறையில் கைதிகள் அடிதடி-உண்ணாவிரதம், சமரசப் பேச்சு
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்தார். அந்த கைதியை தாக்கியவரை வேறு இடத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் சிறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை புழல் மத்திய சிறையில் பிளாக் 1 மற்றும் பிளாக் 2 என இரு பிரிவுகள் உள்ளன. பிளாக் 2ல் வியாசர்பாடி மகாகவி பாரதிநகரைச் சேர்ந்த ஒரு ரவுடியின் சகோதரர் முருகன் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே பிளாக்கில் பிச்சை என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு முருகனுக்கும், பிச்சைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கைதி பிச்சை படுகாயமடைந்தார்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பிச்சையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிச்சையை தாக்கி காயப்படுத்திய கைதி முருகனை பிளாக் 2ல் இருந்து மற்றொரு பிரிவில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக் 2ல் உள்ள கைதிகள் சுமார் 100 பேர் சிறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் 100 கைதிகளும் சுவர் மேல் ஏறி நின்று கொண்டு முருகனை உடனடியாக மீண்டும் பிளாக் 2ல் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் சுவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டியதாகத் தெரிகிறது.
மேலும் இன்று காலை முதல் 100 கைதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications