நளினி குறித்து சோனியா காந்தி மெளனம் சாதிப்பது வியப்பளிக்கிறது-சாமி
சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெருத்த மெளனம் காப்பது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி.
கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி 1405 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதியைக் கொடூரமாக கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற திமுகவினரும் அடக்கம்.
இதை எதிர்த்து சுப்ரமணியம் சாமி வழக்கு தொடர்ந்தார். அதில், லீலாவதி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் விடுதலையாகி உள்ளனர். 14 ஆண்டுக்கும் குறைவாக 2, 3, 5 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் எல்லாம் விடுதலையாவது சட்ட விரோதம் ஆகும். எனவே இந்த விடுதலை செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அரசு பதில் தரவில்லை. இது குறித்து சுப்பிரமணிய சாமி இன்று உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வந்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவிடம் முறையிட்டார்.
தலைமை நீதிபதி முன்பு ஆஜரான தமிழக அரசின் பி.எஸ். ராமனிடம் இன்னும் 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 14 ஆண்டுகளுக்கு குறைவாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை நீதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.
கோர்ட்டால் தண்டனை பெறும் கைதிகளை அரசியல்வாதிகளின் சிபாரிசால் விடுதலை செய்வது சட்ட விரோதம் ஆகும். நளினி விடுதலை விவகாரத்தில் சோனியா காந்தியும், மத்திய அரசும் மவுனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றார் சாமி.












Click it and Unblock the Notifications