Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மார்க்சிஸ்ட் உடைத்தால் மண்குடம், திமுக உடைத்தால் பொன்குடமா?'-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட்கள் உடைத்தால் அது மண்குடம்; தி.மு.க. உடைத்தால் தான் பொன் குடமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி: மத்திய அரசின் உரக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால் அமைச்சர் பதவியில் ஏன் மு.க.அழகிரி ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்று சி.பி.எம். சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கேட்டிருக்கிறாரே?

பதில்: சிறுதாவூரில் ஏழை எளிய தலித் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இடங்களை அ.தி.மு.க. தலைவி ஆக்கிரமித்துக் கொண்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் அரசிடம் புகார் மனு கொடுத்தது. அதன் காரணமாக அவர்களோடு தோழமை கொள்ள மாட்டோம் என்றா விட்டு விட்டார்கள். அழையா விருந்தாளிகளாக சென்று தனி மேடை போட்டு அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கத்தானே செய்கிறார்கள்.

உர விலையை உயர்த்துவதில் தி.மு.க.விற்கு உடன்பாடில்லை என்று எங்கள் கருத்தை உரிய இடத்தில் பதிவு செய்திருக்கிறோம். உடனே அதற்காக அமைச்சர் பதவியே வேண்டாமென்று ஒதுங்கி வந்து விட்டால் மார்க்சிஸ்ட்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போலும்! மார்க்சிஸ்ட்கள் உடைத்தால் அது மண்குடம்; தி.மு.க. உடைத்தால் தான் பொன் குடமா?

கேள்வி: மதுரை மாநகரில் அம்பேத்கர் நகரில் - ராஜீவ் நகர் பகுதியில் முப்பதாண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா அவசரத் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதே?

பதில்: அந்தச் செய்தியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ள போதிலும் அரசின் செயல்முறைகளுக்கு நன்றி தெரிவித்தும் இருக்கிறார்கள். மதுரை தெற்கு வட்டத்தில், 300 தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பாதையாகப் பயன்படுத்திய 19 அடி அகலம் சுமார் 160 அடி நீளமுள்ள இடத்தை சிலர் தடுத்து வருகின்றனர் என்றும் அதனைத் தடுத்து பட்டா வழங்க வேண்டுமென்றும் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நன்மாறன் 25-3-2010 அன்று எனக்கொரு கடிதம் எழுதி; அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.

26ம் தேதியன்றே அந்தப் பகுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும், இதர அதிகாரிகளும் நேரடியாகச் சென்று முப்பதாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் பாதையை ஆக்கிரமிப்பு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்ததோடு, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் என்றும், காவல் துறை ஆய்வாளரையும் அந்த இடத்திற்கு நேரடியாக வரவழைத்து மக்களின் புழக்கத்தில் இருந்த 19 அடி பாதைக்கும், அங்கே வாழும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மக்கள் முன்னிலையிலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார் என்றும், இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையீடு செய்த தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என்றும் அந்த இதழில் எழுதப்பட்டுள்ளது.

தலித் மக்கள் பயன்படுத்தி வரும் பாதைக்கான நிலம் நகர நில அளவை பதிவேட்டில் மகாதேவன் செட்டியார் பெயரில் உள்ளது. அவரிடமிருந்த அந்த இடத்தை வாங்கியவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். தற்போது அந்த ஆக்கிரமிப்பு அரசினால் அகற்றப்பட்டுள்ளது. எனினும் முழுமையாக விசாரணை நடத்தி அந்த இடம் யாருக்குச் சொந்தமானது - முப்பதாண்டு காலமாக அது தலித் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதால் விதிமுறைப்படி என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்திட இந்த அரசு ஆவன செய்யும்.

இந்திரா பார்த்தசாரதிகளுக்கு தெரியாதது வியப்புதான்:

கேள்வி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு இடம் தரப்படவில்லை என்று எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறி இருக்கிறாரே?

பதில்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பர் புறக்கணிக்கப்பட்டு விட்டார் என்று செய்திகள் வருவதற்கு முன்பே - மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றுக்கு கம்பர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று நான் ஏற்கனவே கூறியிருப்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. அண்ணா இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை கழக ஆட்சியிலே நடத்தியபோதே - சென்னை மாநகரில் பத்து தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைத்தபோதே - அதில் ஒன்றாக கம்பர் சிலை வைத்தது இந்திரா பார்த்தசாரதிகளுக்கு நினைவுக்கு வராதது தான் வியப்புக்குரியதாகும்.

கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தலில் பண்போடும், அன்போடும், அமைதிகாக்கும் மனத் தெம்போடும் பணியாற்ற வேண்டுமென்று கோரி நீங்கள் விடுத்த அறிக்கைக்கு மிகவும் காட்டமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உங்களைத் தாக்கி அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: அவர் காட்டமாகத் தாக்கி அறிக்கை விடாமல் இருந்திருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். எனது அறிக்கையிலே தான் அவருடைய கடந்தகால நடவடிக்கைகளையும், அறிக்கைகளையும், பேச்சுகளையும் அனைவரும் அறிவார்கள் என்று எழுதியிருந்தேனே? என்னைப் பற்றி இன்றும் காட்டமாக வர்ணிக்கும் ராமதாஸ் - பென்னாகரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது என்னுடன் தொலைபேசியில் பேசியபோது - இந்தக் கடுமை எல்லாம் மறந்துபோனதன் காரணம்தான் விந்தையிலும் விந்தை!

விலைவாசியை அரசு ஊழியர்கள் தாங்கிக் கொள்வார்கள்:

கேள்வி: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி நிதிநிலை அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்கள். அதன் பயனாக விலைவாசி குறைகிறதா?

பதில்: பல்வேறு பொருள்களின் விலைகள் குறைகின்றது. அரசு அலுவலர்களே எதிர்பாராத அளவிற்கு அவர்களது அகவிலைப்படியினை உயர்த்திய காரணத்தால், விலைவாசி உயர்வினை அவர்களால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். 28ம் தேதிய ஒரு நாளிதழிலே கூட - "சர்க்கரை, எண்ணெய் விலை குறைவு'' என்ற தலைப்பில் - "தமிழகத்தில் சர்க்கரை மற்றும் எண்ணெய் விலை குறைந்துள்ளது. சர்க்கரை விலை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 100 கிலோ மூட்டை ரூ.3,200க்கு விற்பனையானது, சனிக்கிழமை ரூ.3,120 ஆகக் குறைந்து விற்கப்பட்டது. இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் சர்க்கரையின் சில்லறை விற்பனை விலையும் விரைவில் குறையும் என்று தெரிகிறது. மலேசியா சந்தையில் பாமாயில் விலை குறைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு சந்தையில் பாமாயில் விலை குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற எண்ணெய் வகைகளின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.42க்கு விற்பனையான பாமாயில் ரூ.40க்கும், ரூ.52க்கு விற்பனையான சூரியகாந்தி எண்ணெய் ரூ.49க்கும் விற்பனையானது. கிலோ ரூ.70க்கு விற்பனையான கடலை எண்ணெய் ரூ.68க்கும் - ரூ.115க்கு விற்பனையான அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.110க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.75க்கு விற்பனையான முதல்ரக தேங்காய் எண்ணெய் ரூ.70க்கு விற்பனையாகிறது'' என்று வெளியிட்டுள்ளது.

இதுபோலவே மற்ற பொருள்களின் விலையும் விரைவில் குறையுமென்று எதிர்பார்க்கலாம்.

பாமகதான் என்று நரேஷ் குப்தாவே சொல்லி விட்டார்:

கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்முறை வெடிக்கும் - கலவரம் ஏற்படும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தவர்களை ஏமாற்றுகின்ற அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதே?

பதில்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியே வாக்குப்பதிவு முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வாக்களிக்க வந்திருந்தவர்களை வெப்-கேமராவில் பதிவு செய்ததன் மூலம் போலி வாக்காளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப் பதிவு நடைபெறுவது இயல்பானது தான். தேர்தலுக்கு முன்பு, இத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவது கடினம் எனக் கூறியிருந்ததைப் பற்றி கேட்கிறீர்கள். மாவட்ட நிர்வாகம், போலீசாரின் ஒத்துழைப்பால் தேர்தலை அமைதியாக நடத்த முடிந்தது. தேர்தலின் போது தி.மு.க., பா.ம.க., அ.தி.மு.க. கட்சியினரிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. அதிலும் பா.ம.க. தரப்பில் இருந்தே பிரச்சினைகள் உருவானதாகக் கருதுகிறோம்'' என்றெல்லாம் விளக்கம் அளித்துள்ளார்.

ஊதிய உயர்வும் சாதனைதான்:

கேள்வி: தமிழக அரசு அலுவலர்களுக்கான எந்தவொரு சங்கமும் கோரிக்கை வைப்பதற்கு முன்பே அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து விட்டீர்களே?

பதில்: அகவிலைப்படி உயர்வு கேட்டு மாதக் கணக்கிலே கோரிக்கை வைத்து போராடிப் பெற்ற காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால் எந்தச் சங்கமும் கோரிக்கை வைக்காத நிலையில் அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை இந்த அரசு அறிவித்துள்ளதும் ஒரு சாதனைதானே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+