ஊட்டி: சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது
ஊட்டி: ஊட்டியில் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி, பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன்(62). இவரது மகன் நவனீத்கோபாலன்(23).
இவர்கள் நவனீத் டூட்டி டூர் சர்வீஸ் என்ற பெயரில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொது மக்களை சுற்றுலா அழைத்து செல்லும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மூலம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்புவதற்காக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் நவனீத்கோபாலன் ஈடுபட்டார்.
இதன் மூலம் குன்னூரில் இரண்டு பேரிடமும், அதிகரட்டியில் 16 பேரிடமும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் வசூல் செய்துள்ளார்.
மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட் ஆவணங்களையும் பெற்று, ஒரு ஆண்டு காலமாக சுற்றுலா அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 18 பேரும், தங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திரும்ப கேட்ட போது அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுற்றுலா நிறுவனத்தினர் பணம் மற்றும் பாஸ்போர்ட்களை திரும்ப ஒப்படைக்க 15 நாள் அவகாசம் அளித்தனர்.
எனினும் கோபாலன் மற்றும் நவநீத் கோபாலன் ஆகியோர் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து இருவரையும் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications