நாகப்பா கொலை வழக்கு - வீரப்பன் கூட்டாளிகள் 19 பேரும் விடுதலை
பெங்களூர்: கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நாகப்பா கடத்தப்பட்டார். கொள்ளேகால் அருகே நாகப்பாவை அவரின் பண்ணை வீட்டுத் தோட்டத்தில் இருந்து வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்றனர்.
இதன் பின்னர் டிசம்பர் 8ம் தேதி, வனப்பகுதியில் நாகப்பா சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பணமாக கிடந்தார்.
இதுதொடர்பாக வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குழி கோவிந்தன் உள்பட 23 பேர் மீது சாம்ராஜ்நகர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுவரை 44 சாட்சிகள் உள்பட மொத்தம் 199 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கௌடா, சேதுமணி ஆகிய நான்கு பேர் போலீசார் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட மற்ற 19 பேருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடந்துவந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மல்லப்பா உத்தரவிட்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட நாகப்பா குடும்பத்தினர் தவறிவிட்டனர், மேலும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறி 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாகப்பாவின் மனைவி பரிமளா, தனது கணவருக்கு மேலும் ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications