சட்டச் சிக்கலில் சானியா கல்யாணம் - சட்டப்படி சோயப்பின் 2வது மனைவி?
சோயப் மாலிக்கின் முதல் மனைவியாக கூறப்படும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி, சோயப் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
ஏப்ரல் 15ம் தேதி சானியா, சோயப் மாலிக் கல்யாணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிஷா மூலம் கல்யாணத்திற்கு சிக்கல் வந்துள்ளது.
இதுகுறித்து ஆயிஷாவின் தந்தையான சவூதியைச் சேர்ந்த தொழிலதிபர் அகமது கூறுகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே சோயப் மாலிக் மோசடி செய்து ஏமாற்றியுள்ள நிலையில், எப்படி சானியாவின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
சானியா போன்ற அருமையான பெண்ணுக்கு சோயப் எப்படிப் பொருந்துவார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சானியா, சோயப்பை மணந்து கொண்டால் அவர் சோயப்பின் 2வது மனைவியாகவே கருதப்படுவார். காரணம், எனது மகள் ஆயிஷாவைத்தான் சோயப் முதலில் மணந்துள்ளார்.
சானியாவையும் எனது மகளாகவே கருதுகிறேன். சானியாவின் குடும்பத்தினர் எங்களுக்கு நல்ல நண்பர்கள். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக நான் அவர்களுடன் பேசவில்லை. அவர்கள் நன்கு படித்தவர்கள். இதுகுறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஏன் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்?.
சோயப் எனது மகளை மோசடி செய்தது முதல் நாங்கள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்து விட்டோம். இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? உங்களால் பொறுக்க முடியுமா ?
சோயப்பிடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனது மகளை விவாகரத்து செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டால் போதும். இஸ்லாமியச் சட்டப்படி சோயப் எனது மகளை விவாகரத்து செய்யாமல், அவரால் வேறு கல்யாணம் செய்து கொள்ள முடியாது.
இதற்கு சோயப் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க நேரிடும். இதுதொடர்பாக முன்னணி வக்கீல்களுடன் நான் ஆலோசித்து வருகிறேன்.
எனது மகளை மணக்கவே இல்லை என்று சோயப் கூறுவது பொய். 2005ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதில், ஹைதராபாத்தான் எனது மனைவி ஆயிஷா சித்திக்கியின் சொந்த ஊர் என்று கூறியுள்ளார் சோயப். கிரிக்கெட் வர்னணையாளர் அருண் லால், சோயப்பை வாழ்த்தியபோது, எனது மனைவி ஆயிஷா என்றுதான் கூறியுள்ளார் சோயப் என்று தெரிவித்தார் அகமது.
ஹைதராபாத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்காக சோயப் வந்திருந்தபோது பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அகமதுவின் வீட்டில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சோயப்பும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சானியாவை எப்படி துபாயில் வைத்து சோயப் சந்தித்தாரோ அதேபோலதான் ஆயிஷாவையும் அவர் துபாயில் வைத்து சந்தித்தார். பின்னர் பாகிஸ்தான் சென்ற அவர், அங்கிருந்து தொலைபேசி மூலம் ஆயிஷாவை மணந்து கொண்டதாக அகமது கூறுகிறார்.
இந்த சர்ச்சை குறித்து சானியா கருத்து கூறுகையில், கடந்த காலம் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. நிகழ்காலத்தை மட்டுமே நான் நம்புகிறேன் என்றார்.