செம்மொழி மாநாட்டில் 9 கிமீ ஊர்வலம் - மு.க.ஸ்டாலின் தகவல்
கோவை: வரும் ஜூன் 23ம் தேதி தொடங்க உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
மாநாடு நடத்தப்பட உள்ள கொடிசியா வளாக பகுதியை இணைக்கும் பல்வேறு நெடுஞ்சாலைகள், சிறிய சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படுகின்றன.
விமானம், ரயில், பஸ் நிலையங்களில் இருந்து இந்த பகுதிக்கு வரும் அனைத்து பாதைகளும் செப்பனிடப்பட்டு வருகிறது. ரூ.300 கோடி செலவில் கட்டமைப்பு பணிகள் கோவையில் நடந்து வருகின்றன.
மேலும், 60 இடங்களில் குளியலறைகள், மொபைல் கழிப்பிடங்கள், கூடுதல் மின் விளக்குகள், பூங்காக்கள், குடிநீர் வினியோக மையங்கள், 300க்கும் மேற்பட்ட நிழற்குடைகள் என இதர வசதிகளுக்கான பணிகளும் நடந்து வருகின்றன.
மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் 30 அரங்குகள், மாநாட்டு வளைவுகள், திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இரவு, பகலாக நடக்கின்றன.
மாநாட்டையொட்டி கோவை மாநகராட்சி பகுதியில் சாலை மேம்பாடு, பூங்காக்கள், மொபைல் கழிப்பிடங்கள், மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சர்வதேச தாவரவியல் பூங்கா ரூ.20 கோடி செலவில் பிரத்யேகமாக தயாராகி வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் வரும் மே மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டுப் பணிகளை பார்வையிட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்திருந்தார்.
மாநாட்டு அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுபோது, 'மாநாட்டை ஒட்டி கோவையில் 9 கிமீ தூரம் செல்லக் கூடிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் தொடங்கி, கோவை-அவினாசி சாலை வழியாக கொடிசியா வளாகத்தை அடையும் இந்த ஊர்வலத்தில் 40 அலங்கார வண்டிகள் அணிவகுக்கும். செம்மொழி மாநாட்டு சிறப்புகள் இந்த அலங்கார வண்டிகளில் காட்சிப்படுத்தப்படும்.
இந்த ஊர்வலத்தை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி மற்றும் முக்கிய தலைவர்கள் பார்வையிடுவார்கள். வெளிநாட்டு அறிஞர்கள், சிறப்பு விருந்தினர்களும் தனி மேடையில் இருந்து பார்வையிடுவார்கள்.
மாநாட்டு பணிகளை நேரில் பார்த்தறிய முதல்வர் கலைஞர் விரைவில் கோவைக்கு வருவார். அவர் அங்கிருந்தாலும் தினந்தோறும் சக அதிகாரிகளிடம் பணிகள் பற்றி ஆலோசனை நடத்தி, மாநாடு சிறப்பாக அமைய அக்கறை செலுத்தி வருகிறார்' என்று ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications