பாம்பாறு அணை விவகாரம - கைது செய்யப்பட்ட வைகோ, மதிமுகவினர் விடுதலை

காலை 12 மணிக்கு கைதான அவர் பிற்பகல் 2.15 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். அவருடன் மதிமுகவினர் 250 பேர் கைதாகி விடுதலையடைந்தனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன நீர் ஆதாரமாகவும் உள்ளது. சில மாதங்களுக்கு முன், அமராவதி அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுத்து நிறுத்தி, கேரளாவில் உள்ள பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
கேரள அரசின் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து, ம.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ, உடுமலை மற்றும் அமராவதி பாசனப் பகுதிகளில் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
பாம்பாற்றின் குறுக்கே அணை மற்றும் நீர் மின் நிலையம் அமைக்க, கேரள அரசு திட்டமிட்டுள்ள இடங்களை வைகோ இன்று பார்வையிடுவதற்காக காலை 8.30 மணிக்கு உடுமலையிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள மறையூருக்கு புறப்பட்டார்.
ஒன்பதாறு என்னுமிடத்தில் போலீசார் வைகோவின் வாகனத்தை மறித்தனர். கேரள எல்லைப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறினர்.
கைது... விடுதலை
இதையும் மீறி அந்தப் பகுதியைப் பார்க்கச் சென்ற வைகோவின் வாகனத்தை மறித்து அவரைக் கைது செய்தனர். கைதான வைகோவை அங்கிருந்து போலீஸ் நிலையம் கொண்டு செல்ல முயன்றபோது மதிமுகவின் போலீஸ் வாகனங்களை நகர விடாமல் தடுத்துநிறுத்தினர்.
அனைவரையும் கைது செய்ய வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பிறகு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி உட்பட 250 க்கும் மேற்பட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
பிற்பகல் 2-15 மணிக்கு வைகோ மற்றும் அவருடன் கைதான அனைவரையும் விடுவித்தனர் போலீசார்.
பின்னர் தாராபுரத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார் வைகோ.












Click it and Unblock the Notifications