சமாதானம் பேச கடுமையாக முயன்றது அதிமுக – ஜி.கே.மணி தகவல்
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பென்னாகரம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பலமுறை எங்களை தொடர்பு கொண்டனர். ஆனால் நாங்கள் தனித்தே நிற்க விரும்புவதாக உறுதியாக கூறி விட்டோம். நாங்கள் எடுத்த நிலைப்பாடு சரிதான் என்பது தேர்தல் முடிவில் தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அ.தி.மு.க. எங்களுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. அதற்காக அ.தி.மு.க. தரப்பில் உத்தரவாதங்களும் தரப்பட்டன.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்துள்ள கொலை வழக்கு தொடர்பான மனுவை வாபஸ்பெற முன் வந்தனர். அடுத்ததாக அன்புமணி ராமதாசுக்கு மேல்சபை எம்.பி. பதவி தரவும் உறுதி அளித்தார்கள்.அ.தி.மு.க. இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் செம்மலை எம்.பி. ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு கட்சியின் உத்தரவாதங்களை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட போயஸ்கார்டனில் இருந்து எனக்கு போன் வந்தது. டாக்டர் ராமதாசை சமாதானப்படுத்தி மீண்டும் இணைந்து செயல்பட வரும்படி அழைப்பு விடுத்தார்கள். நேரில் போயஸ்கார்டன் வாருங்கள் என்றும் அழைத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று இருந்தால் அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அழைப்பை நாங்கள் ஏற்க வில்லை.இப்போது எங்களது கவனம் எல்லாம் பாமகவை பலப்படுத்துவது மட்டுமே. சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து இப்போது நாங்கள் சிந்திக்கவே இல்லை என்றார் மணி.