தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை: அசாமில் புதிய சட்டம்!
குவஹாத்தி: அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என அசாம் மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது.
சுகாதார வசதிகளை பெறும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளதை உறுதி செய்யும் இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தி இருப்பதாக அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
அசாம் பொது சுகாதார சட்டம், 2010 என்ற இந்த சட்டம் நேற்று முன்தினம் அசாம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இச்சட்டத்தை கொண்டு வந்ததாக அமைச்சர் கூறுகிறார்.
இச்சட்டத்தின் படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திடீர் மாரடைப்பு, விபத்து போன்ற அவசரகால சூழலில் அரசு மருத்துவமனைகளைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
அருகாமையில், தனியார் மருத்துவமனைகள் உட்பட எந்த மருத்துமனை இருந்தாலும் அதில் சேர்ந்து இலவசமாக அவசர சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் எந்த விட கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
இதற்கு பல்வேறு தனியார் மருத்துவமனை அதிபர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இவ்வாறு சட்டம் இயற்றி இருப்பது மிகவும் துணிச்சலான செயல் என டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்' இயக்குனர் ஆர்.சி.டேக்கா கூறியுள்ளார்.
எப்படியானாலும், இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தீருவோம் என்ற முடிவில் அசாம் அரசு உள்ளது.